Chennai city Tamil News: சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் ரூ.660 கோடியில் சென்னை பெருநகர நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை நிறுவும் திட்டத்திற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய திறமையான போக்குவரத்து அமைப்பை உருவாக்க உதவும் இத்திட்டத்திற்கு நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பின் (ITS) வடிவமைப்பு, வழங்கல், நிறுவுதல், ஆணையிடுதல், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி இறுதிக்குள் டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தாமதமானது. தற்போது பொறுப்பேற்றிக்கும் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் இத்திட்டத்தில் மேலும் சில மேம்பாடுகளை நாடியதாகவும், அவை இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டெண்டருக்கு தகுதியான அளவுகோல்கள் குறித்த எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரிடமிருந்து ரூ. 75,000 அல்லது 1,000 டாலர் (ஜிஎஸ்டி உட்பட) திரும்பப்பெற முடியாத கட்டணத்தை ஆவணம் கோருவதால், ஒரு சில இந்திய நிறுவனங்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளன. இத்திட்டத்தில் ஜப்பான் சர்வதேச கோ-ஆப்ரேசன் நிறுவனத்தின் (Japan International Cooperation Agency – JICA ) பங்கு 465 கோடி ரூபாயும், மாநில அரசால் 195 கோடி ரூபாயும் வழங்கப்படும். சென்னை போக்குவரத்து தகவல் அமைப்பு, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் நகர பேருந்து அமைப்பு ஆகியவை திட்டத்தின் முக்கிய கூறுகளாகும்.
ஏலத்திற்கு முந்தைய கூட்டம் டிசம்பர் 8 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஏலங்கள் ஜனவரி 18, 2022 க்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சர்வதேச போட்டி ஏலம் JICA இன் ‘ஒற்றை-நிலை இரண்டு-உறை’ (‘Single-Stage Two-Envelope’ bidding procedure) ஏல நடைமுறையின்படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-tamil-news-the-chennai-smart-city-announce-tenders-for-rs-660-crore-its-project-367733/