சனி, 1 ஜனவரி, 2022

பள்ளிக்கரணை சுற்றுச் சூழல் பூங்கா – பறவைகளுக்கான அடுத்த வேடந்தாங்கல்

 சென்னையில் சுற்றுலாத்தலங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், வேளச்சேரி அருகே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த 700 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வனங்கள், 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்து பூச்சிகளின் வாழ்விடமாகவும், 459 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலுக்கும் உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 – 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இந்த சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்படுவதாக கூறப்பட்டது. சுற்றுச் சூழல் அமைப்பை பாதுகாக்கும் வகையில், சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில், சூழலியல் பூங்கா அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சதுப்பு நிலப்பகுதியை சுற்றி, 1700 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உபயோகிக்கும் வகையில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, வளம் குறித்த விவரங்கள் விளக்கும் வகையிலான அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2.5 ஹெக்டர் நிலப்பரப்பிலான இந்த சூழலியல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார். 

பசுமைக்காக நடைபாதையின் இருபுறங்களிலும் நிலத்திற்கேற்ப, மகிழம், அரசு, பூவரசு, நாவல், கொடுக்காப்புளி, நீர் மருது, மகாகனி, வேம்பு ஆகிய வகைகள் உட்பட 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த பறவையினங்களின் பாதுகாப்பு மற்றும் வேளாண்மையினை கருத்தில்கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pallikaranai-eco-park-is-the-new-year-place-to-visit/

31 12 2021