திங்கள், 8 ஜூன், 2026

300 உதவி பொறியாளர் பதவி உயர்வில் உண்மையை மறைக்கும் அரசு; 116 பேர் கதி என்ன?':

 

8 6 2026

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (டி.என்.இ.பி) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (ஏ.இ.இ) செயற்பொறியாளர்களாகப் (இ.இ) பதவி உயர்வு வழங்கப்பட்ட விவகாரத்தில், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கும் இடையே அறிக்கை போர் தொடங்கியுள்ளது. "வரலாற்றில் முதன்முறை" என இந்த அரசு விளம்பரப்படுத்துவது அப்பட்டமான பொய் என்றும், கடந்த மார்ச் மாதமே தி.மு.க அரசு தயாரித்து வைத்த 416 பேர் பட்டியலில் இருந்து 116 பேரைத் த.வெ.க அரசு உள்நோக்கத்துடன் புறக்கணித்துள்ளது ஏன் என்றும் தி.மு.க தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு!  சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!

உண்மையின் முகம் இதுதான்: டி.என்.இ.பி பதவி உயர்வு குளறுபடியும், டி.என் டி.ஐ.பி.ஆர் (TN DIPR)-ன் பொய் பிம்பமும்! 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (ஏ.இ.இ - ஏ.இ.இ) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, த.வெ.க அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!

உண்மையின் பின்னணி இதோ:

நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.

தி.மு.க அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (ஏ.இ.இ) செயற்பொறியாளர் (இ.இ) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.

இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!

இப்போது எழும் கேள்வி? 

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?

மீதமுள்ள 116 ஏ.இ.இ-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?

செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?

தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024  & 21.08.2025 G.O]
குறிப்பு:

மார்ச் 2026-ல் தி.மு.க அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை” என்று தி.மு.க வலியுறுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-slams-vijay-tvk-govt-tneb-engineers-promotion-controversy-116-members-ignored-12012306