பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்; ஈரானை துவம்சம் செய்துவிடுவேன்... டிரம்ப் எச்சரிக்கை 08 06 2026
ஈரானிடம் உள்ள 400 கிலோவிற்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றி அழிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதற்கு ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும், அந்த இடத்திலேயே அல்லது வேறு இடத்திற்கு மாற்றியோ அது அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி முந்தைய தலைவர்களை விட மிகவும் புத்திசாலி மற்றும் பகுத்தறிவு உள்ளவர் என டிரம்ப் பாராட்டியுள்ளார்.
நேரடிப் போருக்குத் தயார் - ஈரான் பதிலடி
டிரம்பின் இந்த மிரட்டல்களுக்கு மத்தியில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், நேரடி மோதலுக்குத் தயார் என்று ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையை நிறுத்துவது மட்டுமல்லாமல், எதிரியுடன் நேரடியாக மோதவும் தயங்காது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படுவதும் இல்லை, பேச்சுவார்த்தையை நம்புவதும் இல்லை. லெபனான் மீதான கடல் வழி முற்றுகை மற்றும் ஒப்பந்த மீறல்கள் மூலம், அவர்களுக்கு அதிகாரத்தின் மொழி மட்டுமே புரியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா அல்லது போர் தீவிரமடையுமா என்ற பதற்றம் தற்போது சர்வதேச அரங்கில் அதிகரித்துள்ளது.





