வியாழன், 18 ஜூன், 2026

முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட 70 ஆலோசகர்கள் நீக்கம்; செலவைக் குறைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்க திட்டம்!

 ips officers 6 transfer in tamilnadu govt order Tamil News

அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 70 ஆலோசகர்களை விடுவித்து தற்போதைய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இவர்களின் பணிக்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இந்த முடிவுக்கான பின்னணி மற்றும் நிதி சேமிப்பு குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அண்மையில் மேற்கொண்ட விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிகமாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது பணி ஓய்வுக்குப் பின் மறுநியமன முறையிலோ பணியாற்றி வரும் ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளின் முழுமையான விவரங்களைக் கேட்டு அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் மனிதவள மேலாண்மைத் துறை சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், முதற்கட்டமாக சுமார் 70 ஆலோசகர்கள் தங்களது பணிகளில் இருந்து திங்கட்கிழமை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அரசுக்கு கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்கவும், புதிய திட்டங்களை வகுப்பதில் உதவவும், நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தவும் இந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக சட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை போன்ற முக்கிய துறைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணியில் இருந்த ஆலோசகர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் சராசரியாக 1 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஒருசில உயர் ஆலோசகர்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை கூட சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்காலிக ஒப்பந்தப் பணிகளை முறைப்படுத்துவதன் மூலம் தேவையற்ற அரசுச் செலவீனங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று தற்போதைய அரசு கருதுகிறது.

அதோடு, மாநிலத்தில் தற்போது பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தற்காலிக ஆலோசகர்களைக் கொண்டு பணிகளை நகர்த்துவதை விட, முறைப்படியான புதிய தகுதிவாய்ந்த இளைஞர்களைப் போட்டித் தேர்வுகள் மூலம் நியமித்து அவர்களிடம் இப்பொறுப்புகளை ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது இளைஞர்களுக்கான முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அரசு நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த மறுஆய்வு நடவடிக்கை இத்துடன் நிறைவடையவில்லை என்றும், வரும் நாட்களிலும் மற்ற துறைகளில் உள்ள மறுநியமன அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-terminates-70-consultants-appointed-during-previous-dmk-regime-to-cut-costs-12049363