வியாழன், 11 ஜூன், 2020

அமெரிக்காவில் மகாத்மா காந்திசிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது” - அதிபர் ட்ரம்ப்


Image

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இனவெறி தாக்குதல் சம்பவங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கருப்பினத்தவர் ஒருவர் மீது 4 காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இனவெறி தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இனப் பாகுபாடுகளை கண்டித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியே உள்ளிட்ட நாடுகளிலும் போரட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளன.


இதனிடையே கடந்த வாரம் தலைநகர் வாஷிங்டெனில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. உலக அமைதி மற்றும் அகிம்சையின் சின்னமாக திகழும் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உடனடியாக இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர், காந்தி சிலை இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டு மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து நாங்கள் கோரும் உண்மையான மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப், போராட்டத்தின் போது மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என தெரிவித்தார். அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் இந்தியா வந்திருந்த போது மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசரமத்திற்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.