திங்கள், 29 ஜூன், 2020

கொரோனாவிலிருந்து மக்கள் காக்கப்படும் வரை மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவேன்: மு.க.ஸ்டாலின்

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தம் காரணமாகவே ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக முதல்வர் மாற்றுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று கொலை வழக்கு பதிவு செய்திடும்படி வலியுறுத்தியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா குறித்து தான் கூறிய ஆலோசனைகளை தமிழக முதல்வர் ஏற்கவில்லை என்று குறை கூறியுள்ள ஸ்டாலின், தற்போது அவர் செயல்படுத்திய ஒன்றிரண்டும் கூட தன்னுடைய ஆலோசனைகள் தான் என்பதையும் மக்கள் அறிவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவிலிருந்து மக்கள் காக்கப்படும் வரை தான், மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவேன் எனவும் ஸ்டாலின் தமிழக முதல்வரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.