செவ்வாய், 30 ஜூன், 2020

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி ; மனிதர்கள் மீது ஆய்வு நடத்த அனுமதி

 கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்து பெரிய பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளாதாக அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் மனிதர்கள் மீது இம்மருந்தினை கொண்டு ஆராய்ச்சி நடத்த ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவாக்ஸின் (Covaxin) எனப்படும் இந்த மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டணியுடன் ஜீனோம் வேலி ப்ளாண்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்கள் மீதான ஆராய்ச்சிகள் ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவின் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் SARS-CoV-2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்பட்டு பின்னர் ஐ.சி.எம்.ஆர் இந்த மாதிரியை ஹைதராபாத்திற்கு அனுப்பியது. ஆராய்ச்சி செய்த பாரத் பயோடெக் ஆராய்ச்சி மையத்தில் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.