சனி, 20 ஜூன், 2020

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” - மத்திய அரசு

மருத்துவ மேற்படிப்புகளில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், மாநில அரசுகள் பின்பற்றக்கூடிய ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற பரிந்துரை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, பாமக, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரக உதவி தலைமை இயக்குநர் ஸ்ரீனிவாஸ் பதில்மனுவை தாக்கல் செய்தார்.


அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது எனவும் குறிப்பிடபட்டிருந்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்படி, மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.


தற்போது வழக்கு தொடர்ந்துள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, தற்போதைய நடைமுறையை பின்பற்றியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது முதற்கட்ட வெற்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கு திமுக தொடர்ந்து போராடும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


credit https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/20/6/2020/27-reservation-will-be-followed-mbbs-says-central-gov