திங்கள், 29 ஜூன், 2020

பால் முகவர்களுக்கு மிரட்டல் : சர்ச்சையில் மீண்டும் போலீஸ் - விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பால் விற்பனையாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிரங்க மிட்டல் விடுத்த போலீஸ்காரர் ரமணனுக்கு, நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை- மகன் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து பல போலீஸ் தாக்குதல் சம்பவங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பொதுமக்களை கொடூரமாக தாக்குவேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆயுதப் படை போலீஸ்காரர் சரவண முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் நாகப்பட்டினத்தில் போலீஸ்காரர் ஒருவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகிக்கமாட்டோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் சம்பத்தை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம் என்று மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பின்னர் ரமணன் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

தற்போது இந்த பதிவு தொடர்பாக போலீஸ்காரர் ரமணன் மாவட்ட எஸ்.பி. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.