ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 வடகிழக்கு பருவக் காற்று எதிரொலியாக வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வடகிழக்கு பருவ மழை துவங்கி ஒன்றரை மாதத்தில், தமிழகத்தில் இரண்டு புயல்கள் தாக்கி உள்ளன.

கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், 24-ஆம் தேதி அதிகாலை நிவர் புயலாக மேலும் வலுவடைந்து வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்தது.  25-ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் 26-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

நவம்பர் 30-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், டிசம்பர் 1-ஆம் தேதி மாலை தென்மேற்கு வங்கக் கடலில் புரெவி புயலாக உருவானது.

இலங்கையின் வடக்கு பகுதிகளில் நகர்ந்த இந்த புயல் டிசம்பர் 3-ஆம் தேதி பாம்பனில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இந்த புயல் வலுவிழந்தது. மன்னார் வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய கடற் பகுதிகளில் சுமார் 18 மணி நேரம் நிலைகொண்டு, அதன் பிறகு 5-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.

வறண்ட வானிலை நிலவும்:  அதன்படி அடுத்த 48 மணி நேரத்தில் (நவம்பர் 12, 13) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை, மீனவர்களுக்கான எச்சரிக்கையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

தென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழக கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையை பெறுகின்றன. தமிழகத்தின் உள் பகுதிகள் 40% – 50% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவக் காற்று எதிரொலியாக வரும் 16,17 தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.