வியாழன், 24 டிசம்பர், 2020

ஜி.எஸ்.டி. இன்வாய்ஸ் மூலம் எப்படி மோசடி நடைபெற்றது?

  ஐ.டி.சி. க்ரெடிட் பெறுவதற்காக ( input tax credit (ITC)), போலியாக ஜி.எஸ்.டி. விலைப்பட்டியலை தயாரித்தது மற்றும் கருவூலத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறி கடந்த ஒரு மாதத்தில், ஜி.எஸ்.டி இயக்குநரகம் 3,479 நிறுவனங்கள் மீது 1,161 வழக்குகள் பதிவு செய்து 100க்கும் மேலானோரை கைது செய்துள்ளது. வருமான வரித்துறையினர், போலியான விலைப்பட்டியலை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், இது அரசுக்கு அதிக கவலை அளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

அவர்கள் எப்படி அரசங்காத்தை ஏமாற்றினார்கள்?

வரித்துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஏராளமான வழக்குகளில் மோசடிக்காரர்கள் அதிக அளவு போலியான நிறுவனங்களை உருவாக்கி ஜி.எஸ்.டி. பதிவு செய்து, ஜி.எஸ்.டி. இன்வாய்ஸை உருவாக்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. உண்மையாக சேவை ஏதும் இல்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொய்யான ஜி.எஸ்.டி. விலைப்பட்டியல் வெளியிட்டு, கமிஷனுக்காக பொய்யான அந்த பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அளித்து தகுதியற்ற ஐ.டி.சியை பெற முயன்றனர். அவர்கள் மேலும் ஜி.எஸ்.டி. வரிக்காக அதனை பயன்படுத்தியும் உள்ளனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, டிசம்பர் 9 ம் தேதி, வதோதரா வரி பிரிவு 10 மாநிலங்களில் 206 போலி நிறுவனங்களை இயக்கியதற்காக ஒரு நபரை கைது செய்தது, ரூ .1,101 கோடி போலி விலைப்பட்டியல்களை வழங்கி சட்டவிரோதமாக ரூ. 154 கோடிக்கு ஐ.டி.சி.யை வழங்கியது. வேறு சில சந்தர்ப்பங்களில், சில நிறுவனங்களின் விளம்பரதாரர்கள் தொடர்ச்சியான ஷெல் நிறுவனங்கள் மூலம் போலி விலைப்பட்டியல்களை திசைதிருப்பி ஐ.டி.சியை ஒரு ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றியுள்ளதாக வரித் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க உதவியது. ஜி.எஸ்.டி.யை தவிர்ப்பதற்கு மட்டும் அல்லாமல் இது வங்கிகளிலும் இதர நிதி நிறுவனங்களிலும் கடன்களை பெற உதவியது. ரூ. 220 கோடி ஐ.டி.சி. மூலம் மோசடி செய்த மும்பை நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அந்நிறுவனம் தங்களின் வருவாயை அதிகரிக்க 22 நிறுவனங்களுடன் சர்க்குளார் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

மோசடிகளை தூண்டுவது எது?

ஏனெனில் இது தேவையற்ற ஐ.டி.சி.யைப் பெறுவதன் மூலமும், அதிகப்படியான ஐ.டி.சி.யை பணமாக மாற்றுவதன் மூலமும் வரி விதிக்கக்கூடிய வெளியீட்டு விநியோகங்களில் ஜி.எஸ்.டி.யைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், இந்த விலைப்பட்டியல்களைப் பயன்படுத்தி வருவாயை உயர்த்துவதற்கும், வருமான வரியைத் தவிர்ப்பதற்காக போலி கொள்முதல் முன்பதிவு செய்வதற்கும், நிதி திசைதிருப்பல் மற்றும் பணமோசடி செய்வதற்கும் உதவுகிறது. 2018-19ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ரூ 11.251 கோடி சம்பந்தப்பட்ட 1,602 போலி ஐ.டி.சி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுவரை 154 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தற்போது இந்த வழக்குகள் அதிகரித்து வரக் காரணங்கள் என்ன?

வரி அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜி.எஸ்.டி. பதிவு செய்யும் போது போதுமான அக்கறை இல்லாததே ஐ.டி.சி. யை மோசடி மூலம் பெரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்தது. வணிகம் எந்த விதமான சிரமும் இன்றி நடைபெற, அரசால் ஜி.எஸ்.டி. பதிவு மிகவும் எளிமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் முறையான ஆய்வு மற்றும் நேரடி சரிபார்ப்பு இல்லாத காரணத்தால் இதன்மூலம் பல்வேறு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது மட்டும் இல்லாமல் தரவுகள் பரிமாற்றமும் இல்லாததாலும், அமலாக்க முகவர்கள் குறைவாக இருந்ததும் மோசடிக்கு மேலும் வழி வகுத்தது. தற்போது இருக்கும் ஜி.எஸ்.டி அமைப்பு மோசடிகளை கண்டறியும் வகையில் வலுவாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வரித்துறையினரால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்க முடியுமா?

இந்த சந்தர்ப்பங்களில் பணத்தை மீட்டெடுப்பது சாத்தியமில்லை, ஏனெனில் பணம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மிகக் குறைந்த அல்லது சொத்துக்கள் வெறும் காகித அளவிலேயே உள்ளன என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு என்ன திட்டமிட்டுள்ளது?

அரசு ஜி.எஸ்.டி. பதிவு செயல்முறையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதே போன்று போலியான விலைப்பட்டியலை தயாரிப்பதை தடுக்க சட்டநடவடிக்கைகளை கடுமையாக்கவும் திட்டமிட்டுள்ளது. . கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்டக் குழு ஜிஎஸ்டி பதிவு செயல்முறையை கடுமையாக்குவது குறித்து விவாதிக்கவும், ஜிஎஸ்டி சட்டத்தில் தேவையான சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட பிற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூடியது. இது தவிர ஜி.எஸ்.டி.யின் டேட்டா விங் போலியான ஐ.டி.சிகளை வழங்கியது அல்லது பெற்றது என்று 2017ம் ஆண்டு முதல் மார்ச் 2020 வரையில் 9,757 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Related Posts: