திங்கள், 7 டிசம்பர், 2020

அம்பேத்கர் மணிமண்டபம் வந்த அர்ஜூன் சம்பத்துக்கு கடும் எதிர்ப்பு

 மகாபரிநிர்வாண் தினமான இன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை இந்திய மக்கள் நினைவு கூறி வருகின்றனர். பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட பிரிவினரின் எழுச்சியை போற்றும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு  நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும்  மரியாதை செலுத்தினர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் குறிப்பில், “அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி –
அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அண்ணல் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினேன் ” என்று தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் குறிப்பில், “சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் குறிப்பில், “பழைய சனாதன இந்தியாவைத் தகர்த்துப் புதிய சனநாயக இந்தியாவைக் கட்டமைக்க அடித்தளம் அமைத்தவர்.சாதிய தடுப்புச்சுவரைத் தவிடுபொடியாக்கி சமத்துவத்தை நிரவி  ஒப்புரவு சமூகத்தை உருவாக்க வழிவகுத்தவர்” என்று குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு மாலையிட வந்த போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 

எதிர்ப்பு வலுத்ததால், அர்ஜூன் சம்பத் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்காமல் இடத்தை விட்டு திரும்பி சென்றார்.