திங்கள், 7 டிசம்பர், 2020

புரெவி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது; 3 நாட்களுக்கு மழை தொடரும்

 வங்கக் கடலில் உருவான புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்தது. புரெவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே டிசம்பர் 4ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது. அது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அலுவிழந்திருந்த நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, “மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மதியம் வலுவிழந்து. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது வலுவிழந்து தொடா்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.