புதன், 16 டிசம்பர், 2020

மோடி ஆட்சிக்காலம் முழுவதும் போராடத் தயார்: உறுதி குலையாத விவசாயிகள்

 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்ட்தினர், நீண்ட கால போராட்டத்திற்கு தயாராகிவிட்டதாகவும், 2024 இல் முடிவடையும் பிரதமர் நரேந்திர மோடியின் 2வது ஆட்சிக் காலம் முழுவதும் தர்ணா செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்த முயற்சிக்கும் பிளவு சக்திகளுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் உறுதி கூறியுள்ளனர்.

சத்னம் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் (கே.எம்.எஸ்.சி) தலைவர் பாங்கு திங்கள்கிழமை குண்ட்லி-சிங்கு எல்லையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், “டெல்லிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் கடந்த 6 மாதங்களாக எங்கள் வீடுகளுக்குள் உட்காந்துகொண்டிருக்கவில்லை, பஞ்சாபிலும், நாங்கள் துணை ஆணையர் அலுவலகங்களுக்கு முன்னால் பகல் இரவு தர்ணாக்கள் செய்து ரெயில் மறியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தோம்… ஆகவே, நாங்கள் சோர்வடைந்து திரும்பிச் செல்வோம் என்று யாராவது எண்ணினால் அது அவர்களின் தவறு” என்றார்.

பி.கே.யுவின் (தோபா) பொதுச் செயலாளர் சத்னம் சிங் சாஹ்னி கூறுகையில், “எங்களுடைய ‘டெல்லி சலோ’ இயக்கத்தின்கீழ் டெல்லிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருந்தோம். அதனால்தான், நாங்கள் 6 மாத ரேஷன் பொருட்களை எங்களுடன் கொண்டு வந்தோம். இபோது அது பஞ்சாபில் உள்ள எங்கள் ஆட்களைக் காட்டிலும் அதிகமானவர்களைக் கொண்டுவரும். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அவருடைய (பிரதமரின்) ஆட்சிக் காலம் முழுவதும்கூட நாங்கள் இங்கே போராட்டத்தில் அமர முடியும்… எங்கள் இயக்கத்தை நாசப்படுத்த அரசாங்க சார்பு அமைப்புகளின் முயற்சிகள் பற்றியும் நாங்கள் அறிவோம்” என்று அவர் கூறினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பன்னு மேலும் கூறியதாவது: “எங்கள் விவசாயிகள் போராட்டத்தின் முதல் நாளில் இருந்ததைப் போலவே இப்போதும் உற்சாகமாக உள்ளனர். ஏனெனில், விவசாயி எதிர்ப்பு, வேளாண் தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக போராடுவது இப்போது எங்களுக்கு அன்றைய கட்டளையாக மாறியுள்ளது… அவர்கள் எதை வேண்டுமானாலும் எங்களை சித்தரிக்கலாம். ஆனால், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் மீது மட்டுமே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.” என்று கூறினார்.

பஞ்சாப் முன்னாள் படைவீரர்கள் சங்கம் மற்றும் ஜலந்தரின் முன்னாள் படைவீரர் நலச் சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற கர்னல் பல்பீர் சிங் கூறுகையில், பஞ்சாபின் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அவர்களுக்குத் தெரியும். அத்தகைய வலுவான மற்றும் முறையான இயக்கத்தை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம் அதை உடைக்க சார்பு அமைப்புகளால் முயற்சி செய்யப்பட்டது என்று கூறினார்.

பிரபல வேளாண் நிபுணர் பேராசிரியர் கியான் சிங், இதுபோன்ற போராட்டங்களை நாசமாக்கும் முயற்சிகள் வெளிப்படையானவையாக உள்ளன. ஆனால், அனைவரும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகயில், “எல்லோரும் இந்த இயக்கத்தில் பங்கேற்க விரும்புகிறார்கள் … அது சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி அல்லது அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், விவசாயிகள் எந்தவொரு அடிப்படைவாதிகளையும் தங்கள் மேடையில் பேச அனுமதிக்கவில்லை… எனவே, அத்தகைய மக்கள் போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்திய பின்னர் அமைதியாக திரும்பி வருகிறார்கள். அத்தகையவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுப்பதிலும் விவசாயிகள் தலைவர்கள் புத்திசாலிகள். அத்தகைய சக்திகளுக்கு எதிராக அவர்கள் போராட்ட இடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.

அமிர்தசரஸ் குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி. சிங், அங்கே அந்த இயக்கத்தை இழிவுபடுத்தவோ அல்லது பிரிக்கவோ முயற்சிகள் உள்ளன என்று கூறினார்.

“இத்தகைய தளங்களை (விவசாயிகள் இயக்கம்) உடைக்க முடியும். ஆனால், இந்த இயக்கத்தின் நேர்மறையான விளைவை ஆரம்ப காலத்திலேயே அடக்க முடியாது. இது கஹிஸ்தானியர்கள் அல்லது அடிப்படைவாதிகளால் ஈர்க்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இது ஒரு மக்கள் இயக்கம் என்பதை பொது மக்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த போராட்டம் நீண்ட காலத்துக்கு தொடரப் போகிறது. விவசாயிகள் சங்கங்கள் அத்தகைய பிளவு சக்திகளைக் கட்டுப்படுத்த முடிந்தால் ஒரு புதிய வரலாறு எழுதப்படும்.” என்று பேராசிரியர் எஸ்.பி. சிங் கூறினார்.

Source: https://tamil.indianexpress.com/india/delhi-farmers-protest-farm-unions-assert-ready-to-protest-through-pms-entire-term-237345/