புதன், 16 டிசம்பர், 2020

கேரளா பத்திரிகையாளர் மரணம்; குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு பத்திரிகையாளர் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நிலையில், அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

கேரளாவில், சமீபத்தில் தொடங்கப்பட்ட பரத்லைவ் என்ற யூடியூப் சேனலின் தலைமை இயக்குநராக இருந்த எஸ்.வி.பிரதீப் (36), நேற்று அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த இரு சக்கர வாகனத்தில் ஒரு டிரக் மோதியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயிரிழந்த பிரதீப்பின் தாயார், வசந்தா குமாரி பிரதீப் சமூக ஊடகங்களில் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டினார். மேலும், பல மலையாள தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றிய பிரதீப், தனது யூடியூப் சேனலில் மாநில அரசுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியதற்காகவும், தங்கக் கடத்தல் ஊழலில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிற குற்றங்கள் குறித்து அவர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதீப்பின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கேரளா பத்திரிக்கயாளர்கள் சங்கம் சார்பில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து கேரளா மாநில எதிர்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “பத்திரிகையாளரின் ஸ்கூட்டரைத் தாக்கிய வாகனத்தை போலீசார் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை அரசாங்கம் வெளிக்கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளார்.