ஞாயிறு, 16 ஜூலை, 2023

இந்தியாவில் 44% சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வளவு குற்றவியல் வழக்குகளா? ஏடிஆர் அதிர்ச்சி தகவல்

 

நாடு முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 44 சதவீத குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைத்து மாநில சட்டப் பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ‘ஏடிஆர்’ அமைப்பும் ‘நியூ’ என்ற அமைப்பும் கூட்டாக இணைந்து ஆய்வு செய்தன. அந்த ஆய்வில் 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4033 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,001 பேரின் தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 44 சதவீத குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 28 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக தீவிரமான குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றில் கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் அடங்கும்.

அதேபோல் கேரளத்தில் மொத்தம் உள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேர் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பீகாரில் மொத்தமுள்ள 242 எம்எல்ஏக்களில் 161 பேர், தில்லியில் 70 எம்எல்ஏக்களில் 44 பேர், மகாராஷ்டிரத்தில் 284 பேரில் 175 பேர், தெலங்கானாவில் 118 எம்எல்ஏக்களில் 72 பேர், தமிழ்நாட்டில் 234 பேரில் 134 பேர் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இருப்பதாக வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ளனர்.


மேலும், தில்லியில் மொத்தமுள்ள 70 எம்எல்ஏக்களில் 37 பேர், பிகாரில் 242 எம்எல்ஏக்களில் 122 பேர், மகாராஷ்டிரத்தில் 284 எம்எல்ஏக்களில் 114 பேர், ஜார்க்கண்டில் 79 எம்எல்ஏக்களில் 31 பேர், தெலங்கானாவில் 118 எம்எல்ஏக்களில் 46 பேர், உத்தர பிரதேசத்தில் 403 எம்எல்ஏக்களில் 155 பேர் தங்களுக்கு எதிராக தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் 114 எம்எல்ஏக்கள் தங்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களில் 14 பேர் மீது பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரம்;

சராசரியாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூ. 13.63 கோடி சொத்துகள் உள்ளன. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் உறுப்பினர்களுக்கு சராசரியாக ரூ. 16. 36 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சராசரியாக ரூ. 11.45 கோடி சொத்துகள் உள்ளன. இதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக அளவிலான சொத்துகள் உள்ளன. அங்கு மொத்தமுள்ள 223 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 64.39 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

அதைத் தொடர்ந்து ஆந்திரத்தில் மொத்தமுள்ள 174 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 28.24 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 284 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் ரூ. 23.51 கோடி சொத்துகள் உள்ளன. இவற்றில் மிகவும் குறைந்த அளவிலான சொத்துக்களை கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலம் என்றால் அது திரிபுரா தான். அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 59 உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 1.54 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

இதற்கு அடுத்த பாடில்லையாக மேற்கு வங்கத்தில் 293 சட்டமன்ற உறுப்பினராக்களில் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 2.80 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. கேரள மாநிலத்தில் 135 உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கும் ரூ. 3.15 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. நாடு முழுவதும் 4,001 சட்டமன்ற உறுப்பினர்களில் 88 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


source https://news7tamil.live/so-many-criminal-cases-against-44-legislators-in-india-atr-shock-information.html


Related Posts: