திங்கள், 21 ஜூன், 2021

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

20/06/2021 தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 22 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7,817 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 17 ஆயிரத்து 043 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1375 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 870 பேருக்கும் திருப்பூரில் 477 பேருக்கும் சேலத்தில் 517 பேருக்கும் கோவையில் 904 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.