வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

பஸ் அதிபரிடம் முதலீடு செய்து ஏமாந்த 6,800 பேர்: திருச்சியில் குவிந்ததால் பரபரப்பு

பஸ் அதிபரிடம் முதலீடு செய்து ஏமாந்த 6,800 பேர்: திருச்சியில் குவிந்ததால் பரபரப்பு

தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்துவந்தவர் கமாலுதீன். இவருடைய மனைவி ரேஹானா பேகம். இவர்களுக்கு அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இருபது வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்த கமாலுதீன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கி, நல்ல முறையில் செயல்படுத்தி வந்தார்.

இதற்காக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்துவந்த இஸ்லாமியர்களிடம் அவர்களின் விருப்பத்துக்கேற்ப பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்தி வந்ததுடன், பங்குதாரர்களின் முதலீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் லாபப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வந்தார். 

இந்நிலையில் கொரோனா முதல் அலை பாதிப்புக்குப் பிறகு அவரால் பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. நிலமையைப் புரிந்துகொண்ட பங்குதாரர்களும் ஒரு வருடம் வரை பணம் கேட்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கமாலுதீனிடம் பல பங்குதாரர்கள் தங்கள் முதலீட்டுப் பணத்தைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் தவித்த அவர், உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி உயிரிழந்தார்.

இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பிறகு பங்குதாரர்கள் பலர் எங்களுக்கு லாபப் பணம் வேண்டாம் முதலீடு செய்த பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள் என்று கமாலுதீனின் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லையாம்.

கமாலுதீன் இறப்பிற்கு பிறகு சட்ட ரீதியான வாரிசுகள் பங்குதாரர்களின் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக தங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களுடைய புகார் மனுக்களை கொடுக்க 6800 பேர் வந்துள்ளனர்.

இதுகுறித்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கையில்; தஞ்சையை சேர்ந்த தொழிலதிபர் கமாலுதினுக்கு மொத்தம் 182 பேருந்துகளும் அதில் 23 நகர் பேருந்துகளும், கிரானைட் குவாரி, பள்ளி, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள் என சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பங்குதாரர்கள் ஆகிய எங்களிடம் முதலீடாக பணம் பெற்று ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் லாபத்தில் சரியாக பங்குகளை பிரித்து கொடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி அன்று அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 6800 பங்குதாரர்களும் 3 மாதத்திற்கு பிறகு அவருடைய உறவினர்களான மனைவி மற்றும் சட்டப்படியான வாரிசுகளிடம் கடந்த 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தங்களுடைய பங்குத் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

அவர்களை நேரில் சந்தித்த பேசியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், எங்களது பங்கு தொகையை அவர்கள் திருப்பி தருவதாக தெரியவில்லை. எனவே, தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் 6800 பங்குதாரர்களும் புகார் மனுவை அளித்தோம். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எங்கள் பணம் திருப்பித் தரப்படவில்லை.

எனவே எங்களுடைய வழக்குகளை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததின் அடிப்படையில் வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து செல்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இன்று ஒட்டுமொத்த பங்குதாரர்களான 6800 பேரும் அமைதியான முறையில் எங்களுடைய கோரிக்கைகளை பதாகைகளாக கைகளில் ஏந்தி கொண்டு அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், எங்களுடைய புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவில் இன்று கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

திருச்சி மன்னார்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தஞ்சையில் இருந்து ஆயிரக்கணக்கான முகமதியர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் அந்தப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது மட்டுமல்லாமல் பரபரப்பாகவே காணப்பட்டது.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

source https://tamil.indianexpress.com/tamilnadu/thousands-of-people-assemble-in-trichy-after-cheated-by-bus-company-business-man-499868/