ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கோவை: மீண்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

 கோவை: மீண்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

கோயம்புத்தூரில் தரைப்பாலம் மீண்டும் உடைப்பு

கோவையில் நேற்று (ஆகஸ்ட் 26) நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படு இருப்பதால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன‌ ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதாகவும் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும் – மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தகவல் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-bridge-washed-away-again-500959/