திங்கள், 22 ஆகஸ்ட், 2022

பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்; 11 பேர் கைது!

 

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கான்வாய் மீது பாட்னாவில் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய அவர், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பீகார் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்துச் சென்றபோது, அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும், சம்பவம் நடந்தபோது, எந்த வாகனத்திலும் நிதிஷ்குமார் பயணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘‘யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை’ – மத்திய நிதி அமைச்சகம்’

இந்த சம்பம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சோகி மோர் என்ற பகுதிக்கு அருகில் மாலை 5 மணி அளவில், முதலமைச்சரின் 4 வாகனங்கள் மீது சமூக விரோதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


source https://news7tamil.live/attack-on-bihar-chief-ministers-convoy-11-arrested.html