செவ்வாய், 17 மார்ச், 2020

விருதை புறக்கணித்த நல்லகண்ணு: சூடான விவாதம் ஊடகவியலாளர் பாண்டே தனது சாணக்யா யுடியூப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவில் அறிவித்திருந்த சாணக்யா விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு புறக்கணித்துள்ளார். இதையொட்டி சமூக...

 பாண்டே தனது சாணக்யா யுடியூப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவில் அறிவித்திருந்த சாணக்யா விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு புறக்கணித்துள்ளார். இதையொட்டி சமூக ஊடகங்களில் சூடான விவாதம் நடைபெற்றுவருகிறது.
தமிழ் தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். தொலைக்காட்சி நேர்காணல்களில் தனது அதிரடியான கேள்விகள் மூலம் பல அரசியல்வாதிகளை பதில் சொல்ல முடியாத அளவுக்கு திணற வைத்தவர். இவர் தொலைக்காட்சிகளில் இருந்து விலகிய பிறகு சாணக்யா என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் மீது பாஜக ஆதரவாளர் என்று அரசியல்ரீதியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
பாண்டே தனது சாணக்யா யுடியுப் சேனலின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அரசியல்வாதிகளுக்கு விருது அறிவித்துள்ளார். இது குறித்து பாண்டே தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல்வாதிகளுக்கு சாணக்யா விருது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோருக்கு விருது அறிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (மார்ச் 16) மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரங்கராஜ்  பாண்டேவின் விருதை புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தற்போது 94 வயதாகிறது. இவர் தமிழக அரசியலில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். தனது எளிமையான வாழ்க்கை, நேர்மை, கொள்கையில் உறுதி, மக்கள் பிரச்னையில் இன்றும் நேரடியாக களத்தில் போராடுதல் என்று இருப்பவர்.
கம்யூனிஸக் கொள்கையில் உறுதியாக இருந்துவரும் நல்லகண்ணு ரங்கராஜ் பாண்டே அறிவித்துள்ள சாணக்யா விருதை புறக்கணித்துள்ளார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் விவாதங்களை சூடாக்கியுள்ளது.

நல்லகண்ணு பாண்டேவின் விருதை புறக்கணித்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “எண்பது ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி. நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்துகொள்ள மாட்டார்.கொள்கையில் சமரசம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இதனை இடதுசாரிகள், அம்பேத்கரியர்கள், பெரியாரிஸ்ட்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள் என பலரும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து சி.மகேந்திரன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவில் நல்லகண்ணுவின் முடிவை ஆதரித்து ஒருவர் செய்த கம்மெண்ட்டில், “மீடியா மூலம் அறிமுகமான ரங்கராஜ் பாண்டே வை இதுபோன்று முதுபெரும் தலைவர்கள் புறக்கணிப்பதை நான் வழிமொழிகிறேன்
இதுதான் சரியான சாட்டையடி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இந்த முடிவை விமர்சித்து, “விகடன் விருது, புதியதலைமுறை விருது போல சாணக்கியா விருதும் ஒரு ஊடகம் தரும் விருது…
பொது உடைமை இயக்கங்கள் பார்பன எதிர்ப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது… அதிலும் ஜீவா வழியில் வந்த தோழர் சிஎம் மீது மிகுந்த மரியாதை உள்ளது.. வெறுமன அரசியல் ஸ்டன்ட் செய்ய வேண்டாம் தோழர்… விருதை பெறுவதும் பெறாததும் அவரவர் விருப்பம்.. ஆனால், விருது கொடுப்பவர்களை அவமானப்படுத்தும் நோக்கோடு செய்வதால் திமுக தலைமையை மகிழ்விக்கலாம்” என்றும் விமர்சித்துள்ளார்.
மற்றொருவர், “பொண் பணம் பதவி அரை நூற்றாண்டுக்கு முன்னே விரும்பாதவர் அய்யா ஆர் என் கே (கலைஞர் கொடுத்த கார் பணம் அனைத்தையும் கட்சிக்கு அர்ப்பணித்தவர் )” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாண்டேவின் விருதை நல்லகண்ணு புறக்கணித்தது பற்று சமூக ஊடங்களில் சூடாக விவாதம் நடைபெற்று வருகிறது.
credit indianexpress.com