செவ்வாய், 31 மார்ச், 2020

ஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது - ஐகோர்ட்

ஊரடங்கு உத்தரவு மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. அத்தியவசிய பொருள்கள் பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாகவும். காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் மனு கூறியுள்ளார். எனவே ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை பொதுமக்களிடையே கடுமையாக நடந்து கொள்வதாக கூடாது என தமிழக அரசுக்கும் , டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிபதிகள் வீனித் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் வாதிட்டார். அவர் தன்னுடைய வாதத்தில், தமிழக காவல் துறை பொதுமக்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்வதை தடுக்க வேண்டும். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் அப்பாவி மக்கள் மற்றும் மருத்துவர்கள் கூட அத்துமீறலால் பாதிக்கபட்டனர். எனவே இந்த வரம்பு மீறல் உடனடியாக தடுக்கபட வேண்டும்.
அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் அவருடை வீட்டில் இருந்து வீடியோ கால் மூலம் நீதிபதிக்கு பதிலளித்தார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தன்னுடைய வாதத்தில், தடை உத்தரவில் எந்த விதி மீறில் நடைபெறவில்லை. எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை, இதுவரை ஊரடங்கை மீறியவர்கள் மீது தமிழகம் முழுவதும் 17 ,118 வழக்குப்பதிவு, செய்யபட்டுள்ளதாகவும். முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்,
மனுதாரர் குறிப்பிட்ட சம்பவங்களை குறிப்பிடாமல் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே எடுத்து வைப்பதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் வினித் கோத்தாரி சுரேஷ்குமார் அமர்வு, நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்கவில்லை என்றாலும் இந்த பிரச்சனை தொடர்பாக நடுநிலையான அணுகுமுறையை அரசு கையாளவேண்டும். மேலும் மனித உணர்வுகள் இதில் மதிக்கப்பட வேண்டும்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 கீழ் தனி மனித வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது. அவர்களின் வாழும் உரிமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கக் கூடாது தமிழகத்தின் கடைகோடியில் இருக்க கூடிய மக்களுக்கும் காவல் துறையால் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று தமிழக அரசிடம் எதிற்பார்ப்பதாக கூறிய நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
credit : indianexpress.com