செவ்வாய், 24 மார்ச், 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.! March 24, 2020

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்கனவே 9 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் லண்டனில் இருந்து திரும்பிய சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், மற்றும் திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 
அமைச்சர் விஜய பாஸ்கர்
மதுரையைச் சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மதுரையை சேர்ந்த முதியவர், எந்த  வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
credit ns7.tv