வெள்ளி, 27 மார்ச், 2020

ஊரடங்கு தடையை மீறி மதவழிபாடு; காவல்துறை தடியடி! March 26, 2020

ஊரடங்கு தடையை மீறி மதவழிபாடு நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கூட விட்டுவைக்கவில்லை. Social distancing எனப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும் விலகியிருப்பதே இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வழியாக நிபுணர்களால் சொல்லப்படுகிறது. இதையே ஒவ்வொரு நாடும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. 
இதைப்பின்பற்றாவிட்டால் Community spread எனப்படும் சமூக தொற்றாக பரவும் அபாய கட்டத்திற்கு சென்றுவிடும் என்ற நிலையில் அதிகளவில் பாதிப்பும் அதன் காரணமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கின்றனர். இது போன்ற பிரச்சனையையே தற்போது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் சந்தித்து வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில் கோவிட்19 வைரஸ் பாதிப்பில் இரண்டாம் நிலையில் தான் உள்ளது, அது சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்திற்கு சென்றுவிடக்கூடாது என கருதியே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்துவது என்பது நாட்டை பொருளாதார ரீதியில் பின்னுக்குதள்ளிவிடும் என்றாலும் கூட பொதுமக்களின் உயிரே முக்கியம் என்ற ரீதியில் இந்த முக்கிய முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
இந்த அபாயகரமான சூழலை பொதுமக்களும் உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.
இருப்பினும் ஊரடங்கை பின்பற்றாமல் பொறுப்பற்ற ஒன்றுகூடுதல்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவது இந்தியாவில் கோவிட் வைரஸ் பாதிப்பை மேலும் மோசமாக்கும் நிலையில் உள்ளது.
ஏற்கனவே மதவழிபாடு, பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவினால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் மக்கள் பெருமளவில் ஒன்று கூடி வழிபாடு நடத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு உடனடியாக சென்று கூடியிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். கொரோனா மீதான போதிய விழிப்புணர்வும், பொறுப்புமின்றி பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருவது மிகவும் கவலையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கொரோனாவினால் இன்று கர்நாடகாவில் 2வது நபர் பலியாகியிருக்கும் நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 55ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
credit. ns7.tv