திங்கள், 23 மார்ச், 2020

கொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
DMK Walked Out from TN Assembly : நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்ட மன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும், விலகியிருத்தலை கடைப்பிடிக்குமாறும், தமிழக அரசு மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31- ஆம் தேதி வரை காலை, மாலை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, “கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை வலியுறுத்தினார். அலுவல் ஆய்வுக்கூட்டத்திலும் வலியுறுத்தினார். இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்தியாவில் 75 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 8,950 பேர்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், அதற்கும் மேலாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம். பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அச்சத்தில் இருக்கின்றனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு அரசு உடன்படாத காரணத்தால் சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம். கொரோனா வைரஸின் தாக்கத்தை உணர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். தொகுதி மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என, அவர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.
திமுக-வின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் சட்டப் பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.