சனி, 28 மார்ச், 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! March 28, 2020

credit ns7.tv
Image
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
மதுரையில் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இருவர், ஈரோட்டில் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பில் இருந்த இருவர், சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பில் இருந்த ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் என மொத்தம் 9 பேருக்கு சோதனையின் மூலம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இதனிடையே அயர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய 21 வயது இளைஞர் கொரோனா தொற்றுடன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குண்மடைந்துவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும்  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.