திங்கள், 19 செப்டம்பர், 2022

மியான்மரில் கடத்தி செல்லப்பட்டு வதைக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

 

மியான்மரில் கடத்திச் செல்லப்பட்டு தமிழ் இளைஞர்கள் வதைக்கப்படுகிறார்கள்.  மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தாய்லாந்துக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை, மியான்மர் நாட்டின்
மியாவாடி நகருக்கு கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடுத்துவது பற்றிய அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் வரலாறு காணாத வேலையின்மையை எதிர்கொண்டு வருகிறோம். நன்கு படித்த ஏராளமான இளைஞர்கள் ஏதாவதொரு வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளிநாட்டில் வேலை தருவதாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்யும் ‘முகவர்கள்’ தமிழ் நாட்டில் இருந்தும், புதுவையில் இருந்தும் ‘கணிணி உள்ளீட்டு பணி’ தருவதாகவும், நல்ல சம்பளம் கொடுப்பதாகவும் சொல்லி, முதலில் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச்
சென்றுள்ளார்கள்.

ஆனால், அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு கடத்திச்
செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத பணிகளைச் செய்ய
நிர்ப்பந்தம் செய்து, அடித்து வதைத்துள்ளார்கள். இதுபற்றி வெளியாகியுள்ள
வீடியோவில், இளைஞர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும், கடுமையாக அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் கண்ணீருடன் இளைஞர்கள் விவரிக்கிறார்கள்.


பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, செய்வதறியாமல் தவிக்கும்
பெற்றோர்களும் தங்கள் கையறு நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்கிறார்கள்.

இந்திய அரசும், வெளியுறவுத் துறையும் துரிதமாக செயல்பட்டு மியான்மரில்
சிக்கியுள்ள இளைஞர்கள் தொடர்பான விபரங்களை வெளிக் கொண்டு வர வேண்டும். ஆபத்தில் உள்ள இளைஞர்களை பாதுகாத்து மீட்பதுடன், வெளிநாட்டு வேலைக்கு ஆள் பிடிக்கும் முகவர்களை முறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று – கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/tamil-youths-who-are-kidnapped-and-tortured-in-myanmar-should-be-rescued-k-balakrishnan.html