11 7 23
கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கை வரும் 28ம் தேதி தாக்கல் செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின்
அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம்
தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த
காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை
கொள்ளையடித்து தப்பி சென்றனர். இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார்
மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் சேலத்தில்
வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது
உறவினரான ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உட்பட முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நபர்கள் நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6
ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் தனபால், அவரது உறவினரான ரமேஷ் ஆகியோரது செல்போன்களும், தினேஷ் நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், வாளையார்
மனோஜ் உள்பட இவ்வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டபட்டுள்ளோர்களிடம் பறிமுதல்
செய்யபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டுள்ள செல்போன்களில் பதிவாகியுள்ள
தகவல்களை ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பக்கோரி சிபிசிஐடி போலீசார் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இம்மனுவினை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் பரிசீலணைக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி வரும் வாய்தாவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
source https://news7tamil.live/kodanadu-murder-and-robbery-case-information-that-cbcid-is-going-to-file-the-investigation-report-on-july-28.html