செவ்வாய், 14 ஜனவரி, 2020

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு!

Image
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வார்டு மறுவரையறை பணிகளை பொங்கல் விடுமுறைக்குப் பின் தொடங்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த ஏதுவாக வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு பணிகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  
பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் வரும் 22-ம் தேதி முதல் 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட சேர்மன் பதவி, ஒன்றியக்குழுத் தலைவர் பதவி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய இட ஒதுக்கீடு குறித்தும் ஆணையம் முடிவு செய்துள்ளது. விரைவில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

credit ns7.tv