ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக, அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது. எனினும், பேரணிகள் மற்றும் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றவண்ணம் இருந்தது.

அதனை அடுத்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்த சட்டத்திக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வருகிற 27ஆம் தேதி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
credit ns7.tv