சனி, 18 ஜனவரி, 2020

வாக்கிற்காக அரசியலாக்கப்படுகிறது நிர்பயா குற்றவாளிகளின் தூக்குதண்டனை - நிர்பயாவின் தாய்

Image
நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டுவருவதாக அவரது தாயார் ஆஷா தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு, இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாகி விட்டது. ஆனால், குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக மாற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது விஸ்வரூபமெடுக்கிறது.

குற்றவாளிகளுக்கு 22ம் தூக்கு என எதிர்பார்த்த நிலையில் தற்போது, அது அடுத்த மாதம் ஒன்றாம் தேதியாக மாற்றப்பட்டிருப்பது இந்த குற்றச்சாட்டை மேலும் கூர்மை படுத்தி இருக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு என்பது சர்வதேச அளவில் பேசப்படும் விவகாரமாக மாறும் என்பதை பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் அறிந்தே உள்ளனர்... இதன் ஆதாயத்தை அறுவடை செய்ய போவது யார் என்ற போட்டி நிலவுவதாக ஆரூடம் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்... தமது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதிகேட்டு 2012-ம் ஆண்டு போராடிய ஆம் ஆத்மி, பாஜக இரண்டு கட்சிகளும் இப்போது இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது...

இவை எல்லாவற்றையும் தாண்டி குற்றவாளிகளை யார் தூக்கிலிடுவது? அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசா அல்லது டெல்லி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, திகார் சிறை நிர்வாகம், போலீஸ் உள்ளிட்ட அதிகாரங்களை கையில் வைத்துள்ள மத்திய அரசா எனும் குழப்பம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை தாமத்தப்படுத்துவதாக ஆம் ஆத்மி, பாஜக இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டினாலும், டெல்லி மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வி மேலோங்குகிறது... மத்திய அரசின் கையில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் திகார் சிறை நிர்வாகம் போன்ற அதிகாரங்களை 2 நாட்களுக்கு மட்டும் டெல்லி அரசுக்கு அளித்தால் தூக்கு தண்டனையை நிறைவேற்றி விடுவோம் என துணை முதல்வர் மனிஷ் சிசோசியா தெரிவித்திருந்ததை இங்கே நினைவு கூர வேண்டியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசமே பேசி வரும் நிலையில், தாங்கள் பெண் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி அவற்றை வாக்குகளாக அறுவடை செய்ய ஆம் ஆத்மியும், பாஜகவும் முயல்கின்றன என்பதே தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு. இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை தேர்தல் களமே முடிவு செய்யும்.
credit ns7.tv