ஞாயிறு, 19 நவம்பர், 2017

மின்மீட்டர் கொள்முதலில் அப்படி என்ன தான் நடந்தது? November 19, 2017

Image

டிஜிட்டல் மின் மீட்டர் கொள்முதல் டெண்டர் விவகாரம், பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. மின்மீட்டர் கொள்முதலில் அப்படி என்ன தான் நடந்தது? தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்தின் விளக்கம் என்ன? விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

29 லட்சத்து 88 ஆயிரம் டிஜிட்டல் மின் அளவீட்டுக் கருவிகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.
கேபிட்டல் பவர் சிஸ்டம்ஸ் 453 ரூபாய்க்கும், அவாண் மீட்டர்ஸ் 545 ரூபாய்க்கும், ஜீனஸ் இனோவேஷன் 544.90 ரூபாய்க்கும், ஜீனஸ் பவர்ஸ் 544.80  ரூபாய்க்கும், ஹெச்.பி.எல் 495 ரூபாய்க்கும், ஹிமாச்சல் எனர்ஜி 495.45 ரூபாய்க்கும், ஹோலி மீட்டர்ஸ் 513 ரூபாய்க்கும், எல்&டி 508.05 ரூபாய்க்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரின. 

மொத்தம் 13 நிறுவனங்கள் டெண்டருக்காக போட்டியிட்ட நிலையில், 495 ரூபாய் விலை வைத்த எச்.பி.எல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 
ஆனால், குறைந்தபட்ச விலையாக 453 ரூபாய்க்கு தங்கள் நிறுவனம் கோரிய டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே, மின் மீட்டர் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம்.

ஏற்கனவே கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம் 78 லட்சம் மின் மீட்டர்களை 453 ரூபாய் விலைக்கு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழத்துக்கு வழங்கிய நிலையில், தற்போது தங்கள் நிறுவனத்தை நிராகரித்தது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால், அரசுக்கு சுமார் 12.50 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும், இந்த சுமை மக்களின் மீதே திணிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் தெரிவிக்கிறது.

முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள மின்வாரியம், கேபிட்டல் நிறுவனம் குறைந்த தொகையை ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிட்டிருந்தாலும், அந்த நிறுவனத்தின் பொருட்கள் தகுதிவாய்ந்ததாக இல்லை என்பதால், நிராகரிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும் நிராகரித்ததற்கான 'ரிஜக்சன் ஆர்டரை' அளிக்கவில்லையே தவிர, மின்சார வாரியம் தகுதியான நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது. 

கேபிட்டல் சிஸ்டம்ஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒப்பந்தத்திற்கு இடைக்கால தடை பெற்றுள்ளதாகவும், இதற்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மின்அளவீட்டு பெட்டிகள் ஒப்பந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை தேவை என்கிறார் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொள்முதலே செய்யாத நிலையில் முறைகேடு எப்படி நடந்திருக்கும் முடியும் என்ற கேள்வியை கலந்து, தனது மறுப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார். 

ஆனால், இந்த விவகாரத்தில் ஏற்கனவே 70 லட்சம் மின் அளவீட்டு மீட்டர்கள் வழங்கிய நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கவில்லை? கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு தகுதியில்லை என்றால், ஏற்கனவே கேபிடல் பவர் சிஸ்டம் வழங்கிய மீட்டர்கள் தரம் குறைந்தவையா? அப்படியெனில் இந்த மீட்டர்கள் திரும்பப் பெறப்படுமா? அப்படி திரும்ப பெற்றால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? அந்த இழப்பீடு எப்படி சரி செய்யப்படும்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் இல்லாமலே இருக்கிறது.
 
சூழ்நிலை இப்படி இருக்க,  ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது, முறைகேடுகளால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, மின்கட்டண உயர்வு என்ற சுமையை ஏற்றகூடாது என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. 

Related Posts: