வெள்ளி, 24 நவம்பர், 2017

திண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவுப்பணியாளர்கள் வெட்டிப்படுகொலை November 24, 2017

Image

திண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 துப்புரவுப் பணியாளர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் சோலைஹால் நெட்டு தெருவில் வசித்து வந்த பாலமுருகன், சரவணன், வீரன் ஆகிய 3 பேரும் தனியார் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இன்று வழக்கம் போல் வெவ்வேறு இடங்களில் துப்புரவு பணிகளுக்கு சென்றுள்ளனர். 

பாலமுருகன் சிலுவத்தூர் சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதைதொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு சென்ற அதே கும்பல், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சரவணனை வெட்டிக்கொன்றது. பின்னர் அங்கிருந்து சென்ற அதே கும்பல் ரயில் நிலையம் அருகே பணியாற்றிக்கொண்டிருந்த வீரனையும் வெட்டி சாய்த்தது. 

சினிமா பாணியில் நடந்த இந்த மூன்று கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது