சனி, 23 மார்ச், 2019

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...! March 23, 2019

சென்னையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்தாண்டு HIV ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த அறிக்கையின்படி பெண்ணுக்கு அளிக்கப்பட்டது HIV தொற்றுள்ள ரத்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, மருத்துவ குழு அளித்த அறிக்கையையும், வழக்கு குறித்த பதில் மனுவையும் 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

credit ns7.tv