சனி, 23 மார்ச், 2019

கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்! March 23, 2019

Authors
Image
ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை அப்பகுதிவாசிகள் சிலர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் உலா வர, இந்தியா முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. கம்பு, இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கும் அளவிற்கு இவர்கள் மூர்க்கத்தனமாக மாற காரணம் என்ன தெரியுமா?
குர்கிராம் பகுதியில் இஸ்லாமிய சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். ஹோலி கொண்டாடி கொண்டிருந்த சிலர், சிறுவர்களிடம் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுங்கள் என துரத்தியுள்ளனர். இதனை தட்டி கேட்பதற்காக சிறுவர்களின் 
உறவினர்கள் சென்றபோது, அங்கிருந்த கும்பல், அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இதனை தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதும், வலைதள வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

credit ns7.tv