வெள்ளி, 22 மே, 2020

அரசு துறைகளில் புதிய பணியிடங்களுக்கு தடை! - தமிழக அரசு

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. 
கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. நிதிநிலையை சீராக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவினங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
அதன் அடிப்படையில் அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி உயர்வு மற்றும் பணி இடமாறுதலால் ஏற்படும் பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கருணை அடிப்படையிலான தொடக்க நிலை பணியிடங்களை நிரப்பவும் தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.