சனி, 30 மே, 2020

தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்

திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திமுகவின், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவையைச் சேர்ந்த சேகர் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், கோவை வெரைட்டி ஹால் மற்றும் துடியலூர் காவல்நிலையங்களில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கோவையில் இரு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் எனவும், மே 29ம் தேதி வரை எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது எனவும் காவ்ல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு புலன் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தான் தயாநிதி மாறன் பேசியிருக்கிறார் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை தரப்பு பதில் மனுவுக்கு விளக்கமளிக்க டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை கோவை வழக்குகளில் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்ற உத்தரவையும் ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சேர்க்க கோரி தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

credit https://tamil.indianexpress.com/tamilnadu/dayanidhi-maran-tr-balu-dmk-ondrinaivom-va-chief-secretary-chennai-high-court-195012/