புதன், 27 மே, 2020

ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பக்கவிளைவுகள் ஏற்படாது: ஐசிஎம்ஆர் உறுதி

Image

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். ஆனால் மலேரியா தடுப்பு மருந்துகளால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் என லான்சட் மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனை கொரோனா நோய்த்தடுப்பு மருந்தாக தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்யும் மாத்திரையை விட இந்தியா பரிந்துரைக்கும் மாத்திரையின் அளவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் இந்த மருந்தின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வைரஸை எதிர்த்து போராடும் திறன் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்த மாத்திரை பயன்படும் என நாங்கள் நம்புகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை பயன்படுத்தும் போது குமட்டல், வாந்தி, சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னைகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆனால் இதனை தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் பெரிய அளவில் ஏற்படவில்லை. உணவு உண்ட பின்பு இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும், வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதனால் எந்த அச்சமும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்’ என கூறியுள்ளார்.

credit ns7.tv