ஞாயிறு, 24 மே, 2020

தமிழகத்தில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி!

தமிழகத்தில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, 55 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தொழிலாளர்களுக்கு தினமும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தொழிலாளர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பணியிலிருந்து விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.