புதன், 27 மே, 2020

வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் அட்டூழியம்... விவசாயிகள் வேதனை!

credit ns7 
Image

பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், வேளாண் பயிர்களை  அழித்து, வெட்டுக்கிளிகள் பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகளையும், ஆப்ரிக்க நாடுகளையும் பாலைவன வெட்டுக்கிளிகள் பதம் பார்த்து வருகின்றன. அதிக அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளில் ஒன்றான இந்த வெட்டுக் கிளிகள் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் மக்களின் உணவை அழிக்கக் கூடியவை. 

சுமார் 250 ஏக்கர் அளவுக்கு பறக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தில் 15 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். இந்த மாதம் பாகிஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் புகுந்தன வெட்டுக்கிளிகள். 

ராஜஸ்தானில் தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர்கள், வேன்களின் மூலம் வெட்டுக்கிளியை ஒழிக்க  பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு ட்ரோன்கள் மூலமும் பூச்சி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு பெரும் இழப்பை எதிர்கொண்ட பாகிஸ்தானை, ஈரானில் உருவாகும் வெட்டுக்கிளிகளை அழிக்க அந்நாட்டுடன் இணைந்து செயல்படுமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.