ஞாயிறு, 31 மே, 2020

9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது