புதன், 20 மே, 2020

நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க என்ன நடவடிக்கை? ஐகோர்ட் கேள்வி

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பல கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் அண்மையில் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காக கொண்டு சென்று வைத்துள்ளனர்.
இதில், சில கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது. கொள்முதல் செய்ய வேண்டிய விவசாயிகளின் நெல்லும், அந்தந்த கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை நெல் மழையில் நனைந்து சேதமாகி உள்ளன. குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது.
இது குறித்தான நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு,  சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
credit indianexpress.com