செவ்வாய், 26 மே, 2020

சிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது

வட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரா டோட் என்ற மாணவிகள் அமைப்பைச் சேந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில் போலீஸார் அவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.
வட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரா டோட் என்ற மாணவிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 2 பெண்களை ஜஃப்ராபாத் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஐபிசி பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய குற்றங்களின் கீழ்) வழக்கை தொடர முடியாது என்று கூறியது. மேலும், அவர்கள் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-க்கு எதிராக மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து, குற்றவியல் சிறப்பு விசாரணைக் குழு, கொலை, கொலை முயற்சி, கலவரம் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களை கைது செய்து, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரினர். விசாரணை அவகாசம் குறுகிய காலமாக இருந்ததால் நீதிமன்றம் அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் வைத்தது.
பிப்ரவரி 22-23 தேதிகளில் டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழ் சிஏஏ எதிர்ப்பு சாலை மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் தேவங்கனா கலிதா (30), நடாஷா நர்வால் (32) ஆகிய இந்த இரண்டு பெண்களும் அடங்குவர் என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம், பிப்ரவரி 23-ம் தேதி பாஜகவின் கபில் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்களால் சிஏஏ ஆதரவு போராட்டத்தை தூண்டியது. இதனையடுத்து ஒரு நாள் கழித்து மாவட்டத்தில் கலவரம் வெடித்தது.
ஜஃப்ராபாத் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள், சனிக்கிழமை நடாஷா நர்வாலை கைது செய்தபோது சிறப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். கைது செய்யப்பட்ட இந்த பெண்களும், ஜஃப்ராபாத் காவல் நிலையம், கிரைம் பிராஞ்ச் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் சிறப்பு பிரிவு போலீஸ் என 3 விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஜஃப்ராபாத் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அவர்களை ஐபிசி பிரிவு 186 (பொது ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்து தாக்குதல் நடத்துதல்) ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அஜீத் நாராயண், அவர்கள் மீது பிரிவு 353 இன் கீழ் குற்ற வழக்கை தொடர முடியாது என்று கூறினார்.
credit indianexpress.com