செவ்வாய், 13 அக்டோபர், 2015

தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

காய்ச்சல் விரைவாக குணமாவதற்காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம்" என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"காய்ச்சல் சீக்கிரமாக குணமாக சில டாக்டர்கள் ஸ்டீராய்டு, டைக்லோபினாக் மற்றும் பாராசிட்டமால் ஊசிகளை போடுகின்றனர். ஸ்டீராய்டு ஊசி தற்காலிகமாக காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலுக்கான காரணத்தை சரிசெய்யாது. அதே நேரத்தில், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
டைக்லோபினாக், காய்ச்சலுக்கான மருந்தே இல்லை. இது ஒரு வலி நிவாரணியாகும். இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போடுவதால், சிறு நீரகம் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு, டைக்லோபினாக்கை ஊசி மூலம் போட்டுக் கொள்ளவோ, மாத்திரை, மருந்தாக உட்கொள்ளவோ வேண்டாம்.
பாராசிட்டமாலை மாத்திரை அல்லது மருந்தாக உட்கொள்ளலாம். மாறாக ஊசி மூலமாக செலுத்தக்கூடாது. அவ்வாறு செலுத்தினால் வலியோடு கூடிய தேவையில்லாத பிரச்சினைகள் உடலில் ஏற்படும். எனவே காய்ச்சலுக்கு டாக்டர்களிடம் செல்பவர்கள் அவரின் ஆலோசனைப்படி மாத்திரை அல்லது மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும்.
அப்படியும் காய்ச்சல் குறையவில்லை என்றால், வீட்டிலேயே மிதமான சூடு உள்ள தண்ணீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், அக்குள், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவாக காய்ச்சல் குறையும்.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களும் தங்களுடைய சமூக பொறுப்பை உணர்ந்து, காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடுவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.