
கச்சத்தீவு அருகே இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஹிந்தியில் பேச வற்புறுத்தி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்தோணிராஜ் என்ற மீனவர் சக மீனவர்களுடன் தனது படகில் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் திடீர் என மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் தமிழில் பேசக்கூடாது என்று கூறி ஹிந்தியில் பேச வற்புறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.