வியாழன், 14 நவம்பர், 2019

மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மரணத்தில் தமிழகம் முதலிடம் - புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி என்ன?

மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டம் இயற்றி 6 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை இந்த அவலம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மலக்குழியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் 88 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1993ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பதிவான துப்புரவு தொழிலாளர்கள் பலி எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுவரை பதிவாகி உள்ள 620 மரணங்களில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் 131 தொழிலாளர்களும், கர்நாடகத்தில் 75 தொழிலாளர்களும் மரணம் அடைந்துள்ளனர். மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்குவது சமூதாயத்தில் இழைக்கப்படும் அநீதி என்பதை சுட்டிக்காட்டி அதனை தண்டனைக்குரிய குற்றம் என 2013ல் சட்ட இயற்றப்பட்டது. இருப்பினும் தனியார் மூலம் துப்புரவு தொழிலாளர்கள் தற்போதும் இந்த அவலத்தை செய்யும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் தான் இந்த அவலம் அதிகம் உள்ளதா என்று பார்க்கும் போது பெரும்பாலான மாநிலங்களில் இந்த மரணங்கள் பதிவாவதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றன.
மத்திய அரசின் அறிக்கையிலேயே பெரும்பாலன மாநிலங்களில் இந்த மரணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டாமல் உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது. இதனால் தான் இந்த மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கணிக்கிறார்கள். அதே போல தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் கூட தமிழகம் முன்னிலையில் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் 6ல் ஒன்றும் தமிழகத்தில் இருந்து என்கிறது புள்ளி விவரம். சமூக அநீதி குறித்து வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிக விழிப்புணர்வு ஒரு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களும் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவது ஆட்சியாளர்களின் கடமை. மலக்குழி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழில்நுட்பத்தின் உதவியும், தீவிர கண்காணிப்பும் அவசியம் ஆகிறது. 
credit ns7.tv