திங்கள், 27 ஜூலை, 2020

தேர்வு எழுதாத 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச 24ம் தேதி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்று மறு வாய்ப்பு தேர்வு நடைபெறுகிறது.

 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற்றது. மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை, கொரோனா அச்சம் காரணமாக பலர் எழுதவில்லை. அவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று  நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை, 743 மாணவர்கள் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் மட்டும் 20 தேர்வு மையங்களில் 101 மாணவர்கள் மறுவாய்ப்பு தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு எழுத உள்ள 743 பேரில் பெரும்பாலானவர்கள் தனித் தேர்வர்கள் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வுப் பணியில் அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.