சனி, 25 ஜூலை, 2020

லடாக் : மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் இந்திய ராணுவம்

சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதில் தரும் வகையில் இந்தியாவின் மூன்று ராணுவ பிரிவுகள் கூடுதலாக லடாக்கில் இருக்கும் மெய்யான கட்டுப்பாட்டு எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. குளிர்காலத்திலும் இங்கு பணி செய்ய இருக்கும் ராணுவ வீரர்களுக்காக கூடுதல் ஏற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளது இந்திய தரப்பு.

இந்த கூடுதல் ஏற்பாடுகளுக்காக என்னென்ன தேவை மற்றும் என்னென்ன எடுத்து செல்லப்படுகிறது என்பதை இந்திய ராணுவம் தெரிவிக்கவில்லை. இது போன்ற கடுமையான குளிர்காலத்தில் ஒரு ராணுவ வீரரை பராமரிக்க என்னென்ன தேவை என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

மிகவும் சவாலான காரியமாக இருப்பது என்ன?

கிழக்கு லடாக் லடாக் பகுதியானது அதிக உயரத்தில் அமைந்திருக்கும் பாலைவனமாகும். இங்கு வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இந்த அதிகமான உயரத்தில் வீசும் மெல்லிய காற்று சுவாசிப்பதை கடினமாக்கக் கூடும். 2011 முதல் 2013 ஆண்டு வரை 15வது படையின் தளவாட நடவடிக்கைகளின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ஏ.பி.சிங் தற்போது எல்.ஏ.சியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைப்பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்த பகுதி குறித்து அவர் பேசும் போது, “எதிரி, காலநிலை, மற்றும் அவருடைய சொந்த உடல்நலம் என இந்த பகுதியில் பணியாற்றும் ஒரு ராணுவ வீரர் இந்த மூன்றையும் எதிர்த்து போராடுகிறார்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு ஆகும் செலவு என்பது?

ஒரு ராணுவ வீரரை இங்கே தங்க வைக்க ஆகும் செலவு என்பது அவருக்கு தேவையான உணவுகளை வாங்குவதில் துவங்கி தங்குமிடத்தை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருட்கள் வாங்குவது வரை என ஒரு வருடத்திற்கு ரூ. 10 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ராணுவ வீரரை தங்க வைப்பது, அவருக்கு ஆயுதங்களை தருவது, உணவளிப்பது. எதிர்த்து சண்டையிடும் உடல்தகுதியில் தக்க வைப்பது என அனைத்தும் சேர்த்து தான் இந்த செலவு என்கிறார் அவர். யாராலும் சொல்ல முடியாத செலவுகளும் இங்கு உண்டு. அந்த தகவல்களில் இருக்கும் சென்சிடிவ் தன்மை காரணமாக அதை யாரும் கூற மாட்டார்கள். குளிர்காலம் முழுமைக்கும் இங்கு ராணுவத்தை நிறுத்துவது என்பது பெரிய வர்த்தகமாகும் என்று கூறினார் அவர். இந்த பகுதிகளில் பணியாற்றும் பிற ராணுவ வீரர்கள் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மூத்த ராணுவ தளபதி இந்த மதிப்பை விட செலவுகள் அதிகம் ஆகலாம் என்று கூறினார்.

ராணுவ தேவைகளுக்காக பொருட்கள் எப்படி கொண்டு வரப்படுகிறது?

வான்வழி அல்லது சாலை வழி போக்குவரத்து மூலம் கொண்டு வரப்படுகிறது. சாலை வழியில் பொருட்கள் மாற்றம் என்பது கோடை காலத்தில் மட்டுமே சாத்தியம். அதிக உயரமுள்ள பகுதி என்பதால் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இப்பகுதி பனி போர்த்தி காணப்படும். ஸ்ரீநகரில் இருந்து லடாக் செல்ல இரண்டு சாலைகள் உள்ளன. ரோஹ்தாங் பாஸ் (Rohtang Pass) மற்றும் சோஜிலா (Zoji La). ஆனால் இவை இரண்டும் ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. ரோஹ்தாங் சுரங்கவழிப் பாதை ஆண்டின் பிற்பகுதியில் தான் திறக்கும் என்பதால் இது தற்போதையை சிக்கல்களை தீர்க்கும். ஆனால் அந்த வழியில் மேலும் இரண்டு வழிகள் உள்ளன. பரலாச்சா லா, தங்லாங் லா. இவை இரண்டும் ரோஹ்தாங்கை காட்டிலும் அதிக உயரத்தில் இருப்பவை. எனவே கோடை காலத்தில் இங்கு பனி பெய்யும் வாய்ப்புகள் உள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து லெஹ்ற்கு ஒரு ட்ரக் 10 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல ஒரு முறை ஆகும் செலவானது ரூ. 1 லட்சம். சி-17 க்ளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தில் 50 டன் எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். ஒரு மணி நேரம் ஆகும் இந்த பயணத்திற்கு ஆகும் செலவானது ரூ. 24 லட்சம் ஆகும். நாள் ஒன்றுக்கு 200-250 டன்கள் வரை பொருட்களை ஏற்றிச் செல்லும். கனமான பொருட்கள் சாலை வழியாக எடுத்து செல்லப்படும்.

 

ராணுவ தளவாடங்களை லெஹ்ஹில் கொண்டு வந்து இறக்கிய பின்பு என்ன நடக்கும்?

லெஹை அடைந்தவுடன் ட்ரெக் குழு உறுப்பினர்களுக்கு தங்கும் இடம் தயாரிக்க வேண்டும். லெஹ்க்கு பொருட்களை எடுத்து வருவது முதல் நடவடிக்கை தான். 70% பொருட்கள் லெஹ்ஹில் இருந்து சியாச்சின் அல்லது கார்கிலுக்கு இங்கிருந்து எடுத்து செல்லப்படும். இங்கிருக்கும் நிலப்பரப்பு மிகவும் கடினமாக இருப்பதால் இங்கிருந்து பொருட்களை எடுத்து செல்ல ராணுவம் உள்ளூர் ஆட்கள், கழுதைகள் அல்லது குதிரைகள் மூலம் பொருட்களை எடுத்து செல்வார்கள். கோடை காலத்தில் 10 கி.மீ வரை தினமும் நடந்து பொருட்களை அங்கிருக்கும் முகாமிற்கு எடுத்து செல்வார்கள். எனவே ராணுவ வீரர்கள் குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த முறை இதற்கு கூடுதலாக ஆகும் செலவு என்ன?

குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை ராணுவம் ஏப்ரல் முதல் மே மாதங்களில் சேமித்துக் கொள்ளும். மிகவும் அவசர தேவை என்றால் மட்டுமே விமானம் பயன்படுத்துவோம். 14வது படை பிரிவிற்கு 6 முதல் 7 மாதங்களுக்கு தேவையான 2 லட்சம் டன் பொருட்களை சேமிப்பில் வைத்திருப்போம். தற்போது குளிர் காலத்திலும் ராணுவ வீரர்கள் அங்கேயே தங்க வைக்கப்படுவதால் தேவையான பொருட்கள் இரண்டு மடங்காக ஆகிறது என்று கூறிவிட இயலாது. ஆனால் 3 லட்சம் பொருட்கள் தற்போது தேவையாக இருக்கிறது. சாலை வழியாக பத்து டன் கொண்டு செல்ல ரூ .1 லட்சம், மற்றும் விமான போக்குவரத்தின் அதிக விலை, மொத்த கூடுதல் போக்குவரத்து செலவை கணக்கிட முடியும். அரசு அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து தற்போது வாங்க வேண்டிய சூழலில் உள்ளது.

படையினருக்கு தற்போது என்ன சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுகிறது?

மிக அதிக உயரத்தில் இருப்பதால், ராணுவ துருப்புகளை சூடாக வைத்துக் கொள்ளவும், சாத்தியமான சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள தயார் நிலையிலும் ராணுவ வீரர்கள் இருப்பார்கள். இங்கு இருக்கும் அநேக ராணுவ வீரர்களுக்கு இது முதல் குளிர்காலம். அதே நேரத்தில் இது போன்ற மிகவும் கடுமையான காலநிலையிலும் கூட போர் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் என்று சிங் குறிப்பிட்டார்.

14000 அடிகளுக்கு மேலே இருக்கும் அனைத்தையும் super-high altitude என்று அழைப்போம். கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் மற்றும் கோக்ரா போஸ்ட் போன்ற இடங்கள் 14 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே உள்ளது. தெப்ஸாங் சமவெளி 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. அங்கு இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இல்லை என்றாலும் கூட, வழக்கமாக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் ரோந்து பணிகளை தடுத்துள்ளது சீன ராணுவம்.

Special Clothing and Mountaineering Equipment (SCME) உடைகள் இது போன்ற அதி உயர பகுதிகளில் அணியப்படுகிறது. இதில் கயிறுகள், சிறப்பு தலைக்கவசங்கள், பனிப்பிரதேசத்திற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகள் அடங்கும். இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் இரண்டு உடைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும்.

5000 ரிசர்வ் வீரர்கள் உட்பட 30 ஆயிரம் வீரர்கள் தேவை என்று கூறியுள்ளோம். தற்போது கூடுதலாக வரும் ராணுவ வீரர்களுக்கு மேலும் கூடுதலாக இது போன்ற ஆடைகள் தேவைப்படுகிறது. அவர்கள் கால்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா போஸ்ட் மற்றும் தெப்ஸாங் சமவெளி பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2015-18 ஆம் ஆண்டிற்கான ஒரு அறிக்கையில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ” இந்த ஆடைகளை கொள்முதல் செய்வதில் நான்கு ஆண்டுகள் வரை ஏற்படும் தாமதம் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது” என்று குறிப்பிட்டார். இராணுவம் இந்த அறிக்கையை நிராகரித்தது, இது முந்தைய காலகட்டம் தொடர்பானது என்றும், பின்னர் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது என்றும் சிங் கூறினார்.

வேறு என்ன சவால்கள் உள்ளது?

காலத்திற்கு எதிராகவும் ராணுவத்தினர் போராட வேண்டியது உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து லெஹ் வந்து மீண்டும் ஸ்ரீநகர் செல்ல 15 முதல் 20 நாட்கள் தேவைப்படும். ஹோதாங் பாஸ் என்றால் இன்னும் கூடுதலான நேரம் தேவைப்படும். அனைத்து போக்குவரத்துகளும் மூடப்படுவதற்கு முன்பு இராண்டு மடங்கு பொருட்களை எடுக்க வேண்டும் என்று கூறினார் சிங்.

துர்புக் – ஷ்யோக்-தௌலத் பெக் ஓல்டி சாலை உட்பட பல்வேறு சாலைகள் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களையும் சேமிக்க வேண்டும். மேலும் மிக முக்கியானது என்னவென்றால் இந்த பகுதிகளில் தங்குவதற்கு மேலும் புதிய இடங்களை கட்ட வேண்டும். எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் போது எவ்வளவு கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என உங்களால் உணர முடியும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சிமெண்ட் இறுகாது. ராணுவத்தினருக்கான புதிய கட்டுமானங்களை ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.