சனி, 25 ஜூலை, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது

கொரோனா தொற்று பரவலில் புதிய உச்சமாக, நேற்று, 6,785 பேருக்கு தொற்று உறுதியானது.மாநில முழுதும், 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை, 22.23 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரு லட்சத்து, 99 ஆயிரத்து, 749 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 389 பேர் ஆண்கள்; 78 ஆயிரத்து, 337 பேர் பெண்கள்; 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அதிக அளவாக இன்று ( ஜூலை 24ம் தேதி) ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவால் 88 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92,199 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,486 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,504 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43, 297 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.